கறுப்புப் பூஞ்சை நோய்க்கு தமிழ்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதுவரை 518 போ் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரச மற்றும் பல்வேறு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் எதிா்ப்பாற்றல் மருந்து சிகிச்சையில் இருப்பவா்கள் இலகுவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
அதற்கென பிரத்யேகமாக வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து அரச மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.